Thursday, May 29, 2014

அயர்ந்த நித்திரை - அறுவை சிகிட்சை

விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சன் முதன்முதலில் குளோரோபாமை கண்டுபிடித்தபோது பிரசவ வலியை தடுக்க நாம் இதை மயக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையை வைத்தார்.அப்போது அக்கால மத‌போதகர்கள் இல்லை இல்லை இது இயற்கைக்கு எதிரானது பிரசவ வலியை தடுத்தல் வேதாகமத்துக்கு எதிரானது என்றனர். விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சனோ உடனே ஆதியாகமம் 2:21‍‍ ஐ எடுத்துக் காட்டி கர்த்தர் ஆதாமுக்கு "அயர்ந்த நித்திரையை" வரப்பண்ணி அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து கர்த்தர் ஏவாளை உருவாக்கினதை சுட்டிக்காண்பித்தார்.கடவுள் ஆதாமை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். இது இப்படியிருக்க ஏவாளோ கடவுளால் வேறு விதமாக உண்டாக்கப்பட்டாள். மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என எண்ணிய கடவுள் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அப்போது அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.கடவுள் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
ஆமேன்.
முதல் மயக்கமருந்து நிபுணரும் நம் கர்த்தரே!
முதல் அறுவை சிகிட்சை நிபுணரும் நம் கர்த்தரே!!

Thursday, May 15, 2014

உலகிலேயே மிகப் பெரிய பத்து கட்டளைகள்


உலகிலேயே மிகப் பெரிதாக பத்து கட்டளைகள் எழுதப்பட்டுள்ள இடம் அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் The Fields of the Woods Bible Park (Murphy, NC ) எனும் இடத்தில் உள்ளது. இங்கு ஒரு அழகிய பசுமையான குன்றின் சரிவில் மிகப்பெரிய எழுத்துக்களில் பத்து கட்டளைகளை அழகாக எழுதி வைத்துள்ளார்கள். ஒவ்வொரு எழுத்துக்களும் சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த குன்றில் ஏறக்குறைய‌ 350 படிகள் உள்ளன. இதன் வழியாக ஏறி உச்சிக்கு சென்றால் அங்கே திறந்த நிலையில் இருக்கும் மிகப்பெரிய பரிசுத்த வேதாகமத்தை காணலாம். 1945‍ ம் ஆண்டில் இந்த பூங்கா நிறுவப்பட்டதாம். இது தவிர எதிரே ஒரு அழகிய‌ ஜெபமலை, வேத சத்தியங்கள் செதுக்கப்பட்ட தலைக்கற்கள், இயேசுவின் கல்லறையின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், கொல்கொதா மலைமேட்டின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், புற்களால் "JESUS DIED FOR OUR SINS." என அழகாக செதுக்கி எழுதப்பட்ட ஒரு பூங்கா, அந்த கால மிஷனெரிமார்கள் பயன்படுத்திய ஒரு குட்டி விமானம் என நாம் காண பல விசேஷ‌ங்கள் அங்கு இருக்கின்றன‌. ஆமாங்க‌ அதெல்லாம் அந்த காலம். அமெரிக்கா அமெரிக்காவாக இருந்த காலம். இப்போது பத்து கட்டளைகளையும் உடைத்து தள்ளிவிட்டு சோதோம் காலத்துக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த பூங்கா கூட சீக்கிரத்தில் பூட்டப்பட்டு விடலாம். யார் அங்கு போவது? எதற்காக போவது? உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்.(லூக்கா 19:42)
http://fieldsofthewoodbiblepark.com/