Sunday, November 11, 2012

என் ஜனங்கள் என்னை விட்டுவிட்டார்கள்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலும் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தங்களுக்கு யார் வேண்டும் என மக்களே தீர்ப்பளித்து விட்டார்கள். மேலும் மெய்னே,மெரிலேண்ட், வாசி்ங்டன் மற்றும் மின்னசோட்டா மாகாணங்கள் கூட முழு மனதாக ஒருபால் திருமணத்துக்கு (Same sex marriage) ஏக ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். அருமையான முன்னேற்றம். மன்னன் எவ்வழியோ அப்படியே மக்கள் வழியும். நாட்டு அதிபரே அதற்கு வெளிப்படையாக ஆதரவை தெரிவித்து விட இனியும் யோசிக்க என்ன இருக்கிறது. எங்கேயோ போய்கொண்டிருக்கிறது தேசங்கள். தான் பேசப் போன பல்கலைகழகத்தில் இருந்த கிறிஸ்தவ அடையாளங்களையெல்லாம் டிவியில் தெரியாதபடி திரை போட்டு மறைக்க சொன்னவர் தானே அவர். இயேசு கிறிஸ்துவை குறிக்கும் I.H.S.அதாவது இலத்தீன் மொழியில் Iesus Hominum Salvator பொருள் இயேசு, மனிதரின் இரட்சகர் என்ற அடையாளத்தையும் சிலுவையும் வேண்டுமென்றே மறைத்தார்களே. மற்றதெல்லாம் இனிக்க கிறிஸ்து மட்டும் ஏனோ பயங்கர கசப்பு. அதிபருக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பகவத்கீதையை வைத்து பதவிப்பிரமாணம் எடுக்க இருக்கிறார் ஹவாயிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பெண் துளசி கப்பர்ட். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேச தலைவர்கள் பொறுப்பாய் செயல்பட்டு தங்கள் பணிகளை இறை பயத்தோடு செய்ய நம் ஜெபங்களில் இவர்களை கருத்தாய் நினைத்துக்கொள்ளுங்கள்.

எரேமியா:2:13. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.