Sunday, August 10, 2008

666- அந்திக் கிறிஸ்து யார்?

தன்னைத் தீர்க்கத்தரிசி என்று அழைத்துக் கொள்ளும் ஜீன் டிக்சன் (Jeane Dixon) என்னும் அமெரிக்கப் பெண்மணி 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி இரவு தன் ஹொட்டல் அறையிலிருந்து ஜன்னலின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டாளாம். அத்தரிசனத்தில் ஒரு கரிய நிற உருவம் ஒரு கரிய நிற குழந்தையை மத்திய ஆசியாவில் உள்ள ஒரு குடியானவப் பெண்ணிடம் ஒப்படைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் அத்தரிசனத்தின் விளக்கத்தை அறிய தன் உதவியாளர்களைக் கலந்தாலோசிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறினர். கடைசியில் ஒரு உதவியாளன் பரிசுத்த வேதாகமத்தின் வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆராய்ந்து விட்டு இத்தரிசனம் "அந்திக் கிறிஸ்துவின்" பிறப்பை எச்சரிக்கிறது என்ற விளக்கத்தைக் கொடுத்தான். இதன் அடிப்படையில் ஜீன் டிக்சன் 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு அந்திக்கிறிஸ்து உலகில் பிறந்து விட்டான் என்ற தீர்க்கதரிசன அறிக்கையை வெளியிட்டாள். இத் தீர்க்கதரிசன அறிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜீன் டிசனுடைய அனேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போயிருந்தாலும் அவள் கூறின சில தீர்க்க தரிசனங்கள் அப்படியே நிறைவேறியிருந்தன. உதாரணமாய் ராபர்ட் F.கென்னடி, ஜான் F. கென்னடி ஆகிய இருவரும் எங்கு எப்போது மரிப்பார்கள் என்று அவள் கூறினாள். அது அப்படியே நடந்தது. அந்திக்கிறிஸ்துவை குறித்து ஜீன்டிக்சன் அறிவித்த தீர்க்கதரிசனம் அநேக சினிமா படத்தயாளிப்பாளர்களுக்கு விறு விறுப்பான "Subject" ஆக அமைந்தது. இதன் அடிப்படையில் ரோஸ் மேரி பேபி (Rose Mary Baby), ஹோலோகாஸ்ட-2000 (Holocaust-2000), அப்போகாலிப்ஸ் (Apocalypse), ஓமன் I, ஓமன் II (Ommen I, Ommen II) என்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக ஓமன் I-ம், II-ம் அந்திக்கிறிஸ்துவைக் குறித்த எச்சரிப்பை உலக மக்களுக்கு கொடுக்க எடுக்கபட்டதாக அதன் தயாரிப்பாளர் "பாப் மங்கர்" (Bob Munger) தெரிவித்துள்ளார். வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆதாரமாக திரையில் காண்பித்து இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படங்கள் உலகமெங்கும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டன.

இவ்வாறு திரைப்படங்கள் மூலம் பிரபலமாக்கப்பட்ட அந்திக்கிறிஸ்துவைக் குறித்து தெளிவாய் எச்சரிக்கிற புத்தகம் பரிசுத்த வேதாகமமே. இந்த அந்திக்கிறிஸ்து உலகை ஆளும்போது உலகில் உண்டாகப்போகிற மகா உபத்திரவ காலத்திற்கு காத்துக்கொள்ளக்கூடிய வழியையும் பரிசுத்த வேதாகமம்தான் கூறுகிறது. இப்படிப்பட்ட ஒரு உலக சர்வாதிகாரி உலகை ஆளக்கூடிய சூழ்நிலைகள் இப்போது உலகில் உருவாகிக்கொண்டுள்ளன. வெகு சீக்கிரத்தில் அது சம்பவிக்கவும் போகிறது.

இப்படிப் பட்ட ஒரு உலக அரசு (World Govt.) ஏற்படக்கூடிய அவசியம் உலக அரசியலில் ஏற்பட்டுள்ளது. இப்போது உலகில் உள்ள கோர்ட் (World Court), உலக பாங்கு (World Bank) இவையெல்லாம் வரப்போகிற உலக அரசின் முன்னோடிகள். இதல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட உலக அளவில் ஆன அமைப்புகள் இன்று உலகில் செயல்பட்டு வருகின்றன, இப்படிப்பட்ட ஒரு உலக அரசு ஏற்பட வேண்டும் என்ற ஒரு மசோதா நமது பாராளுமன்றத்தில் Dr.H.V.காமத் அவர்களால் கொண்டு வரப்பட்டதாக 8-5-78 ஹிந்து பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. உருவாகப்போகிற உலக அரசு வரப்போகிற அந்திக் கிறிஸ்துவின் ஆட்சிக்கு வழி வகுக்கும்.

அந்திகிறிஸ்துவை குறித்த திரைப்படங்களுக்கு ஆதாரமான தீர்க்கதரிசனத்தை வெளியிட்ட "ஜீன் டிக்சன்", தான் பரிசுத்த ஆவியினால் தான் தீர்க்கதரிசனம் சொல்வதாக தெரிவித்தாலும் உண்மையில் அவ்வாறு இல்லை. சுருங்கச் சொன்னால் அவள் ஒரு பிசாசினுடைய "மீடியம்" கிறிஸ்தவ விசுவாசிகள் ஜீன் டிக்சனுடைய தீர்க்கதரிசனத்துக்காய் காத்திருக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனத்திற்காய் விசுவாசிகள் காத்திருக்கவும் கூடாது என்று வேதம் உபாகமம் பதின்மூன்றாம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களில் தெரிவிக்கிறது. அப்படியென்றால் அந்திக்கிறிஸ்துவைக் குறித்து வேதம் என்ன தெரிவிக்கிறது என்று இனி பார்ப்போம்.

-தொடரும்.

டாக்டர்.S.ஜஸ்டின்பிரபாகரன் அவர்களின் "666- அந்திக் கிறிஸ்து யார்?" என்ற புத்தகத்திலிருந்து.

1 comment: