Thursday, September 13, 2012

கிறிஸ்து பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை (1888-1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, ”தமிழன் என்றோர் இனமுன்று தனியே அதற்கோர் குணமுண்டு' 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' போன்ற இவரது மேற்கோள்கள் பிரபலமானவை.

இவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாடிய பாடல்

தூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்
துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.

நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.

ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!

யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

Reference:
Namakkal kavinjar V. Ramalingam Pillai about Jesus Christ
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0079.html

2 comments: